அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்,  சென்னை

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது. இந்த கடற்கரைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது . அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அட்ட லட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோயில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கசம் (மடிசார்) புடவை கட்டி உள்ளார். கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அட்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது (ஓம்கார ஷேத்திரம்). கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது. இது தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தைப் போலவே கட்டப்பட்டுள்ளது,

ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.  புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூசை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.அந்த தினங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.

இங்கு அட்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பைபெற்றதாக உள்ளது.

1.உடல்நலம்பெற ஆதிலட்சுமி.

2.பசிப்பிணி நீங்க தான்யலட்சுமி.

3.தைரியம் பெற தைரியலட்சுமி.

4.சௌபாக்கியம் பெற கஜலட்சுமி.

5.குழந்தைவரம் பெற சந்தானலட்சுமி.

6.காரியத்தில் வெற்றி பெற விசயலட்சுமி.

7.கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமி.

8.செல்வம் பெருக தனலட்சுமி.

மேற்கூறிய காரியங்கள் நடைபெற எட்டு இலக்குமிகளையும் வணங்குதல் நலம்.

வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும்.

இத்தலத்தில் திருமுழுக்காட்டு ஆராதனைகள், புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக் கடன்களாக உள்ளது.