சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி வழங்க மறுத்துள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி கோரி தமிழக மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணையில் , மருத்துவர்கள் விதிமீறலில் ஈடுபடவில்லை எனவும் பணி நிமித்தமாக அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அரசு தரப்பில் ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே மருத்துவர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தமிழக அரசு இந்த மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 22-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.