சென்னை : தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில் நள்ளிரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்து வருகிறது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக மழை பெய்வதாகவும், ஜூலை 20 வரை மிதமான மழை பெய்யக் கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்யும் என்றும்,. , கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (ஜூலை 16) வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும்,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது

இந்த மழையின்போது,  காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 – 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளில்  மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப்பகுதிகளில் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் அதனால் மீனவர்கள் எச்சரிக்கையும் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.