மேட்டுப்பாளையம்

மத்திய அமைச்சர் எல் முருகன் தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

ரயில்வே வாரியம் தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாரம் 2 நாட்கள் புதிய ரயில் இயக்க ஒப்புதல் அளித்து சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் இந்த ரயில் இயக்கப்படாமல் இருந்து வந்ததால் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மாவட்ட பயணிகள் நலச்சங்கம், வர்த்தக தொழில் சங்கங்கள், எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் இந்த ரெயிலை விரைவாக இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இன்று, தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது. காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் புதிய ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாரம்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். அதே போன்று மறுமார்க்கத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.