புதுடெல்லி:
15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய சூழல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசுபாட்டால் ஆண்டிற்கு பல லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழக்கின்றனர். குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரப பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த சூழ்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி மொத்தமாக ரூ.2,200 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான முதல் தவணையாக 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்களுக்கு இந்த தொகையானது விடுவிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு மட்டும் 396.5 கோடியும், குறைந்தபட்சமாக ஹரியானா மாநிலத்திற்கு 24 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

இதில் தமிழகத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.116.5 கோடியும் அடங்கும். குறிப்பாக சென்னைக்கு ரூ.90.5 கோடியும், மதுரைக்கு ரூ.15.5 கோடியும், திருச்சிக்கு ரூ.10.5 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.