டில்லி

புயல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் அடித்த யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதில் மேற்கு வங்கத்தில் விமானம் மூலம் புயல் பாதிப்புகளைப் பிரதமர் நேரடியாகக் கண்டறிந்த பிறகு மேற்கு வங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்கு பெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்ததால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். அவருக்காகவும் அதிகாரிகளுக்காகவும் பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் அரை மணி நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  கூட்டத்துக்கு மம்தா மட்டுமின்றி மேற்கு வங்க மாநில அதிகாரிகளும் தாமதமாகவே வந்தனர்.

அப்போது மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாகப் பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்துப் பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இது விவகாரம் சர்ச்சையை உண்டாக்கியது.   இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலரை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலர் அலபன் பண்டோபாத்யாயாவை உடனடியாக பணியாளர் பயிற்சி துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது.

அவரை அனுப்பி வைக்க முடியாது என முதல்வர் மம்தா  மறுத்து விட்டார். இதற்கு இடையே அவர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.  ஆயினும் அவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார்.  இது மத்திய பாஜக அரசுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது.

தற்போது யாஸ் புயல் தொடர்பான பிரதமர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலர் அலபன் பண்டோபாத்யாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  அவர் பிரதமர் மோடியின் கூட்டத்தைப் புறக்கணிக்கக் காரணம் என்ன என்பது குறித்து 3 நாட்களுக்குள் தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.