சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார் .
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், . “இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. அதுபோல, இஸ்லாமியரை வஞ்சிக்கும் வகையில் வக்பு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது” எனவும் முதலமைச்சர் உரையாற்றினார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எதைச்செய்தாலும் குறிப்பிட்ட பிரிவினரை வஞ்சிக்கும் விதமாகவே செயல்படுகிறது. பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது. இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கிறது.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, வக்பு நோக்கத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மத்தியஅரசு, வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை கலையும் வகையில், வக்பு வாரிய சட்டத் திருத்தத் மசோதாவை மத்திய பாஜக அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா குறித்து விவாதங்கள் நடைபெற்ற நிலையில், பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வும்செய்தது.
இதையடுத்து, இந்த மசோதாவில், தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் தெரிவித்த 14 திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவ ருகின்றன. அனால் அவர்களது குற்றசாட்டுகளை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டமாக மறுத்தார்.
இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு அறிக்கை மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத நபர்கள் 4 பேர் வரை சேர்க்க கூட்டுக்குழு அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரச்சனைகளை விசாரிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து மணிலா அரசால் நியமிக்கப்படும் மூத்த அதிகாரிக்கு மாற்றவும் கூட்டுக்குழு பரிந்துரை செய்தது. கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து இந்த மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அதே போல மாநிலங்களவையிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்த நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.