டெல்லி: தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வு  ரூ.5,700 கோடிஒதுக்கீடு செய்து  மத்திய நிதி அமைச்சகம்  உத்தரவிட்டு உள்ளது.

மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்ற நிலையில், முதல் கையெழுத்தாக பிரதமர் மோடி, விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை விடுவித்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து மாநிலங்களுக்கான வரி பகிர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியில் ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வசூலாகும் வரி தொகையில் ஒரு பகுதியை  மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.  மாநிலங்களுக்கு ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1லட்சத்து 39ஆயிரத்து 750கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப் படுகிறது. அதன்படி தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆந்திராவுக்கு ரூ.5,655 கோடியும், அருணாசல பிரதேசத்துக்கு ரூ.2,455 கோடியும், அசாமுக்கு ரூ.4,371 கோடியும் நிதி பகிர்வு அளிக்கப்படுகிறது. அதிக அளவாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு 25 ஆயிரத்து 69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்ததாக பீகாருக்கு 14 ஆயிரத்து 56 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.10 ஆயிரத்து 970 கோடியும், மேற்கு வங்காளத்துக்கு ரூ.10 ஆயிரத்து 513 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.8 ஆயிரத்து 828 கோடியும் நிதி பகிர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.