கரூர்:  விஜய் பிரசார கூட்டத்தில் 41பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூரில் செப். 27 ஆம் தேதி  தவெக தலைவர் விஜய்  மேற்கொண்ட பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதியின் விமர்சனமும் கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் ரத்து செய்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர்  அக்டோபர்  15 ஆம் தேதி கரூர் வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணையை தொடங்கினர்.

அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு ஐஜி அஸ்ராகர்க் தலைமையிலான சிறப்பு குழுவினர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கையை ஒப்படைத்தனர்.

இதை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள்,  மறுநாள் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 18 ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பட் முன்னிலையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக கரூர் மாவட்ட தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தாக்கல் செய்தனர். இந்த முதல் தகவல் அறிக்கை நகலை தவெக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக் கொண்டனர்.

இதைததொடர்ந்து தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் விசாரணையை முடுக்கி விடுடுள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த அவர்கள் அங்குள்ள பொதுப்பணித் துறையின் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். இதையடுத்து முதன்முதலாக கூட்ட நெரிசல்  சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணிடம் வியாழக்கிழமை பிற்பகலில் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9. 45 மணிக்கு வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட சிபிஐ அதிகாரிகள், அங்குள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.