சென்னை:  கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய மற்றும் விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை ஆகியோர் இன்று மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் கண் பார்வை பறிபோன நிலையில், 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக பிரமுகர்கள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. அதனால், இந்த கொடூர சம்பவம்   குறித்து  சிபிஐ விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு அதை ஏற்க மறுத்து,   மாநில காவல்துறையின் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில்,  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்  விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை அதிமுக எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.