சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக  முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம், எதிர்க்கட்சியான அதிமுக இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று, மத்தியஅரசு  மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்  வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். அப்போது,  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான்  திராவிட மாடல் அரசின் கருத்து என்றவர்,  சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

. இதையடுத்து, தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி   சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை பேசும்போது,  இந்தியாவில் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் முதல் முதலில் குரல் எழும்பியது தமிழ்நாட்டில் இருந்துதான். மத்திய அளவில் சமூக நீதிக்கு எதிரான, உண்மைக்குப் புறம்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2011ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை எதற்காக மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதுவே இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதற்கு அடையாளம். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என கூறினார்.

தவெக தலைவர் வேல்முருகன் பேசும்போது,  “வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 10.5 % இட ஒதுக்கீடு செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. மத்திய அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான தரவுகளைத் தமிழ்நாடு அரசே திரட்டவேண்டும் என  வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து அவை உறுப்பினர்கள் தீர்மானத்தின் விவாதத்தில் பங்கேற்று பேசி ஆதரவு தெரிவித்தனர். இதன்பிறகு, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்மீது முக்கிய எதிர்க்கட்சி அதிமுக பங்கேற்கவில்லை. முன்னதாக, கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை சபாநாயகர் அப்பாவு அவையில் இருந்து வெளியேற்றியதுடன், இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் அவை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதித்துள்ளார். இதனால் எதிர்க்கட்சி இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம்