கடலூர்: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில  கைது செய்யப்பட்ட திமுக எம்.பி.யின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு செய்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் நாடாளுமன்ற தொகுதி  திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் உள்ளது. அங்கு வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் மெத்தனம் காட்டினர். இதையடுத்து, நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. ரமேஷ்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில்  மர்ம இறந்த ஆலை தொழிலாளி கோவிந்தராஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருக்கு மது கொடுத்து, அடித்து  கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து  இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. இதனால் திமுக எம்.பி. ரமேஷ் தலைமறைவானார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருடன் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கடந்த  13ஆம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் ரமேஷ் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டார்,

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் 9ந்தேதி (நவம்பர்) வரை நீட்டித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.