மதுரை:  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்தியஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.

 வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவு அமலில் உள்ளது. இதை நீக்கக்கோரி,  திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் உயர் நீதிமன்றம்  மதுரை அமர்வில் பொதுநல மனு  தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் , ‘பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் 3 (2) (i) இந்த பிரிவின் படி, பட்டியலின அல்லது எஸ்சி/எஸ்டி பிரிவை சாராத ஒரு நபர், வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்திற்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மரண தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த, நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, இது போன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இந்தச் சட்டப் பிரிவின் செயல்பாட்டிற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.,இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த, குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ஜெகன் இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி, இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஏற்கனவே சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறி வருகின்றன. இவ்வாறு உள்ள சூழலில் இந்த சட்டத்தை ரத்து செய்தால் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி வாதிட்டார். தொடர்ந்து, இடையிட்டு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் , மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

1989 ஆம் ஆண்டு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் பிரிவு 3(2)(i), ஒரு SC அல்லது ST இனத்தைச் சேர்ந்த ஒருவரை மரண தண்டனைக்கு உள்ளாக்குவதற்காக தவறான ஆதாரங்களை உருவாக்குவதைக் கையாள்கிறது. இந்தச் செயலுக்கான தண்டனை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம். இந்த ஜோடிக்கப்பட்ட ஆதாரத்தின் விளைவாக ஒரு அப்பாவி SC அல்லது ST இனத்தைச் சேர்ந்த ஒருவர் தூக்கிலிடப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என கூறுகிறது.

[youtube-feed feed=1]