சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்வானதை எதிர்த்து எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த மனு செல்லும் என கூறி உள்ளது.
“விதிப்படி அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை என கூறியதுடன், எடப்பாடிக்கு எதிரான மனு செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சூரியமூர்த்தி மனுவில், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறப்பட்டிருந்ததும், அதை மீறி தேர்வு செய்யப் பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பின ராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறி, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளார்.