செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அதிகரித்து வரும் தாக்குதலை அடுத்து சரக்கு போக்குவரத்து பெருமளவு பாதிப்பு.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் ஹெஸ்பொல்லா, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு திருப்பமாக இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது.

ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு படையான ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த நேரடி போர் காரணமாக ஏடன் வளைகுடாவிலும் சரக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், வழக்கத்துக்கு மாறாக சிங்கப்பூரை சுற்றி ஏராளமான வர்த்தக கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் மற்றும் பதற்றம் நீடிக்கும் நிலையில், சரக்கு கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கடல்சார் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் தாக்கம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஈரான் – இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமன்றி உலகத்தின் பல நாடுகளை பாதிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.