டோக்கியோ:

பிலிப்பைன்ஸ் அருகே கடலில் சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தில் 11 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர்.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ பிலிப்பைன்ஸ் அருகே 26 பேருடன் சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. ஹாங்காங் பகுதியை சேர்ந்த 33,205 டன் எடையுள்ள அந்த சரக்கு கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக சென்றபோது புயலில் சிக்கி, பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் இன்று நீரில் மூழ்கியது.

இதில் பயணம் செய்த இந்தியர்களில் 11 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் 15 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கப்பல் விபத்தில் மூழ்கியவர்களை ஜப்பான் கப்பல் படையினர் 2 ரோந்து கப்பல், 3 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடி வருகின்றனர். மேலும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், சீன நாட்டு தூதரகங்கள் மூலமாக தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’’ என்றார்.