ஒட்டாவா: கொரோனா 2ம் அலை காரணமாக கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன.

இந் நிலையில் கொரோனா 2ம் அலை காரணமாக கனடா நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான ஓன்டாரியோ மாகாணத்தில் டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 23 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டொராண்டோவில் ஏற்கெனவே உணவகங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய அறிவிப்பின் காரணமாக கல்வி நிலையங்களும் மூடப்பட உள்ளன. பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆலோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.