சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை கிரானைட் ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படாததுகுறிது , தமிழ்நாடு காவல்துறையை கடுமையாக விமர்சித்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க பரிசீலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சகாயம் ஆஜராகவில்லை. இதனால், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இதுகுறித்து கேள்வி எழுப்பிய துடன், சகாயம், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறிய நிலையிலும், இதுவரை அவருக்கு பாதுகாப்பு வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், “இப்போ சகாயத்துக்கு பாதுகாப்பு தர போறீங்களா.. இல்லன்னா நாங்க மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க உத்தரவிடுவோம் என்று கடுமையாக எச்சரித்தனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், கிரானைட் ஊழல்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியதுடன், பல மலைகள் குவாரிகளால் அழிந்து போவதிலிருந்தும் தடுத்தார். கிரானைட் வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. அந்த வழக்கு விசாரணையில் சகாயம் ஆஜராகாத நிலையில், அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் வர இயலவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து இந்த விஷயம் பெரும் பரபரப்பாக மாறிய நிலையில், சகாயத்திற்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு “யாருக்கு பாதுகாப்பு அளிப்பது என்பதை காவல்துறை, உளவுப் பிரிவுடன் ஆலோசித்து முடிவு செய்யும். பாதுகாப்பு கோரி அளிக்கப்படும் கடிதத்தில் இருக்கும் விவரங்கள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.