டில்லி
ஏர் இந்தியாவின் 100% பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களுக்கு விற்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாகக் கடன் சுமையால் தவித்து வருகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. தற்போது நிலவும் கடும் போட்டி, விமான எரிபொருள் விலை ஏற்றம், விமானப் பயணிகள் ஏர் இந்தியா மீது ஆர்வம் காட்டாதது உள்ளிட்ட்வைகளால் இந்நிறுவனம் கடு நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
அதையொட்டி ஏர் இந்தியாவின் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களிடம் விற்று நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 49%வரை மட்டுமே ஏர் இந்தியாவில் முதலீடு செய்ய முடியும். அந்த முதலீட்டை 100 % ஆக உயர்த்த அனுமதி வழங்கக் கோரி விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.
இது குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து அமைச்சகங்களிடமும் அரசு கேட்டுக் கொண்டது. முழுவதும் தனியார் வசமாக்கப்படும் நிலையில் 100% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தால் ஏர் இந்தியா நன்கு வளர்ச்சி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அமைச்சரவை 100% அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.