கோவால்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதில் மார்ச் 27 அன்று 47 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 1 அன்று 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6 அன்று 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வரும் மே 2 ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தலையொட்டி அசாம் மாநிலத்தில் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  நேற்று பாஜகவுக்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.  இன்று காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்துள்ளார்.  அவர் லகோவால் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  அப்போது அவர் அசாம் மக்களுக்குப் பல அறிவிப்புக்களை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி, “காங்கிரஸ் வெற்றி  பெற்றால் வீட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உரிமைத்  தொகை வழங்கப்படும்.  டில்லியில் நடப்பது போல் இங்கு 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

அசாமில் தேயிலைத் தோட்டங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.365 வழங்கப்படும்.   மாநிலத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.  குறிப்பாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் அசாமில் அமலாகாது” என உறுதி அளித்துள்ளார்.