டில்லி:

பா.ஜ.க ஆட்சியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் நெருக்கடிக்கு உள்ளாவதாக கூறி ‘அரசியல் சாசனத்தை காப்பாற்றுங்கள்’ என்ற நிகழ்ச்சி காங்கிரஸ் சார்பில் இன்று டில்லியில் நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது நாடாளுமன்றத்தை அரசே முடக்குகிறது. என்னை 15 நிமிடம் பேச அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் இருந்து மோடி வெளியே ஓடி விடுவார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் உள்ளவர்கள் அரசின் எல்லா நிறுவனங்களிலும் நிரப்பப்படுகின்றனர்.

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபாண்மையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். ஆனால் அடுத்த முறையும் பிரதமராக மோடி துடிக்கிறார். தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மோடி வாய்திறப்பதில்லை?’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘பெண்களை பாதுகாப்போம் என மோடி கூறி வந்தார். தற்போது பா.ஜ.க தலைவர்களிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பிரச்சனைகளை கையாளும் திறன் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது’’ என்றார்.