லண்டன்:

பிரிட்டனுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாக பிரிட்டன்  பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1973ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் உள்ள 28 நாடுகளின் கூட்டமைப்பில் இங்கிலாந்தும் உறுப்பினராக உள்ளது. இந்த கூட்டமைப்பு ஐரோப்பா கண்டம் என்பது ஒரே நாடு என்னும் நிலைபாட்டுடன் இயங்கி வருகிறது .

இதன் காரணமாக கூட்டமைப்பில் இருந்து  விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்ததால்,  பிரிட்டன் தனது தனித்துவம் மற்றும் இறையாண்மையை இழந்து விட்டதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இதன் காரணமாக  பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது.  அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்த நிலையில்  பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து,   முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

போரிஸ் ஜான்சன்  பதவியேற்ற சில மாதங்களில், பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால்,  பிரெக்சிட் உடன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போரிஸ் ஜான்சனின் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் போர்க்கொடி தூக்கி, தங்களது பதவியில் இருந்து விலகினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து,  ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு வார்ர்த்தை நடத்த முன்வந்தார்.

அதையடுத்து, பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில்  உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டது என்று  போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தின் சட்ட உரையில் செயல்பட்டு வருகின்றனர், ஆனால் அதற்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் தேவைப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

போரிஸ் ஜான்சன் அறிவிப்பை தொடர்ந்து, விரைவில்  இங்கிலாந்து நாடாளுமன்றம் கூடும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நீடித்த நிலையில், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.