பதின்டா: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சார கூட்டம் நடைபெற்ற இடம் அருகில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மூவர் பலியானார்கள், பலர் படுகாயம் அடைந்தார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 4 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள மாருர் மண்டிர் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பிரச்சார கூட்டம் நேற்று மாலை நடந்துகொண்டிருந்தது.

அப்போது கூட்டம் நடந்துகொண்டிருந்த பகுதி அருகே மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஒரு சிறுவன் உள்பட மூவர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்து விரைந்து வந்து குண்டுவெடிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். காரில் குக்கர் வெடிகுண்டை பயன்படுத்தி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.