நியூயார்க்:

ஐரோப்பியா, சீனா உட்பட பல நாடுகள் போயிங் 737 மேக்ஸ் ரக விமான சேவையை ரத்து செய்துள்ளன. இந்த வரிசையில் தற்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது.


எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, உலகிலேயே அதிக விமானங்களை தயாரிக்கும் போயிங் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

ஐரோப்பிய மற்றும் சீனா போன்ற உலக நாடுகள் போயிங் விமான சேவையை ரத்து செய்தன.
இந்நிலையில், அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து கிடைத்த சாட்டிலைட் ஆதாரங்களின் அடிப்படையில், போயிங் விமான சேவை அமெரிக்காவிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது.

எவ்வளவு நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. போயிங் விமானத்தின் பேட்டரியில் புகை வந்ததால், கடந்த 2013-ம் ஆண்டு இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.

பறப்பதற்கு இந்த விமானங்கள் தகுதியானவையா என்பது குறித்து ஆய்வு செய்தபின்பே, மீண்டும் போயிங் விமானங்களை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.