சென்னை: மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும். 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இரு மொழி கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்தியஅரசு தாய்மொழி, ஆங்கிலம் உடன் மாணவர்கள் விருப்பப்படும் மேலும் ஒரு மொழி கற்றுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசும், அரசியல் கட்சிகளும், அது இந்தி திணிப்பு என கூறி மத்தியஅரசின் திட்டத்தை அமல்படுத்த விட மறுத்து வருகின்றன.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பழங்கரையில் `வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பின் 11-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று, ‘சூழலியல் மாற்றத்தில் தொழில்முனைவோர் பங்கு’ என்ற தலைப்பில் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி தமிழகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கு கிறோம். வரும் மே மாதம் வரை 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
கல்வி சமத்துவத்துக்காக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை பற்றி பேசுவதில் தவறில்லை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மும்மொழி கற்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்பதே எங்கள் கேள்வி என தெரிவித்துள்ளார். பாஜக எழுப்பும் கேள்விகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு சாதகமாக மடைமாற்றம் செய்து கொள்வதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, வட இந்தியர்கள் ஆங்கிலத்தில் பேசத் தெரியாதவர்கள் என்றால் முதலமைச்சரின் ஆங்கில புலமை எத்தகையது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மொழி புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்தும் முன் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மாணவர்களின் மொழி புலமை குறித்த ASER அறிக்கையை படிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் கூறியவர், தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக மக்களை முதல்வர் ஸ்டாலின் குழப்பி வருவதாகவும், விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதிகள் உயரும். எனவே, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது. இந்தக் கூட்டம் பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சி என கடுமையாக சாடினார்.
சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது கிழிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், இந்த விவகாரத்தில், காவல்துறை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சீமானுக்கு சம்மன் கொடுக்க வேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்களிடம் சம்மன் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து வாசலில் ஒட்டப்பட்டது தோவையற்றது. தேடப்படும் குற்றவாளி வீட்டில்தான் சம்மனை சுவரில் ஒட்டுவார்கள். இந்த விஷயத்தில் காவல் துறை நடந்துகொண்ட விதம் ஏற்புடையதல்ல என்றார்.
மும்மொழி கொள்கை குறித்த திருமாவளவன் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திருமாவளவன், சிபிஎஸ்இ பள்ளி நடத்துவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
திருப்பூரில் பல பள்ளிகள் அருகே கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆளுநரை சந்திக்க உள்ளோம். வேங்கைவயல்போல இந்த பிரச்சினையையும் கையாளக் கூடாது. சிபிஐ விசாரணைதான் இதற்கு தீர்வு.
மயிலாடுதுறையில் மூன்றரை வயது குழந்தை விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்ல. அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்தது வரவேற்கத்தக்க விஷயம்.
திமுகவினர் குறுநில மன்னர்கள்போல செயல்படுகின்றனர். ஊராட்சித் தலைவர்களை நான் மதிக்கிறேன், ஆனால் உதயநிதி ஸ்டாலினை நான் தலைவராக மதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.