ஐதராபாத்: ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான் பாஜகவும், டிஆர்எஸும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார். ஒருவர் டில்லி சுல்தான், மற்றொருவர் ஐதராபாத் நிஜாம் என்றும் கடுமையாக சாடினார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ராம்ரமேஷ், நாட்டில் அதிகரித்து  விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஜிஎஸ்டி, ஒன்றிரண்டு பெரிய நிறுவனங்களின் ஏகபோகம், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகிய மூன்று கூற்றுக்களை பற்றி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கவலைப்படுகிறார்கள். அதே வேளையில், சமூகம் மதம், ஜாதி, மொழி, உணவு மற்றும் உடை ஆகியவற்றின் அடிப்படை யில் பிளவுபட்டதாகக் கூறப்படும் சமூக துருவமுனைப்பு இரண்டாவது கவலை. அதே நேரத்தில் அரசியல் மீதான மையப்படுத்தல் மூன்றாவது கவலை என்றார். தற்போது நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்ரா என்பது நீண்ட உரைகள் நிகழ்த்தப்படும் ‘மன் கி பாத் யாத்ரா’ அல்ல, இது மக்களின் குரல் கேட்கும் யாத்திரையாகும் என்று ரமேஷ் கூறினார்.

தெலுங்கான முதல்வர் கேசிஆர் கூறி வரும் தேசிய கட்சி குறித்து கடுமையாக விமர்சித்ததுடன்,  சந்திரசேகர்ராவின் ‘பாரத் ராஷ்டிர சமிதி’ தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் ஆகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மட்டும் அல்ல, பாஜகவின் முகத்தைக் கொண்ட டிஆர்எஸ்-க்கும் ஒரு செய்தியே என்றவர்,  பாஜகவும், டிஆர்எஸ் கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒருவர் டெல்லி சுல்தானாகவும், மற்றொருவரும் ஐதராபாத் நிஜாமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையே எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்றார்.

தசரா பண்டிகையை முன்னிட்டு ராகுலின் யாத்திரை 2 நாட்கள்  (4ந்தேதி, 5ந்தேதி) நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், மீண்டும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் கர்நாடகாவின் மாண்டியாவிலிருந்து யாத்திரை தொடங்கும் என்றவர், அப்போது, ராகுலுடன், யாத்திரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்பார் என்று தெரிவித்தார்.