லாலு பிரசாத் யாதவுடனான மோதலை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆகும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிதிஷ்குமார்சு – சுஷில்குமார் மோடி

பீகாரில்,லாலுவின் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம்,  நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார்.

லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்த போது முறைகேடுகள் செய்து சொத்துக்கள் வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தன.   தற்போது துணை முதல்வராக உள்ள, தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பெயர்களில் ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி இருக்கிறது. . இதனால் தேஜஸ்வி பதவி விலக  நிதிஷ் கெடு விதித்திருந்தார். ஆனால் தேஜஸ்வி பதவி விலக முடியாது என்று லாலு தெரிவித்தார்.

இந்த நிலையில், நிதிஷ்குமார் ஆளுநர் கேசவ்நாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆளுநரும் நிதிஷ்குமாரின் ராஜினாமா மனுவை ஏற்றுக் கொண்டார்.

இதனிடையே, சுஷில் மோடி, நித்யானந்த் ராய் உள்ளிட்ட  பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்  நிதிஷ்குமார் வீட்டில் அவரை சந்தித்தனர்.  தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதனையடுத்து  அவர்களது ஆதரவுடன் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார், துணை முதல்வராக சுஷில்குமார் மோடி மற்றும் 28 அமைச்சரகள் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆக, பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி  – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.