கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி முதுகலை பட்டதாரி மருத்துவ மாணவி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் பீகார் மருத்துவமனையில் மற்றொரு பாலியல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகார் முஸ்ரிகரரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் மீது கூட்டுப் பலாத்கார முயற்சி புதனன்று இரவு நடைபெற்ற நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் உட்பட மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, முஸ்ரிகரரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவரும் அவரது இரண்டு கூட்டாளிகளும் சேர்ந்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவரை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த மருத்துவரின் ஆணுறுப்பை பிளேடால் கிழித்த அந்த நர்ஸ் அங்கிருந்து தப்பி வெளியேறி காவல்துறை ஹெல்ப்லைன் எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மருத்துவரும் அவரது கூட்டாளிகளும் மது அருந்தியிருந்ததும் மது போதையில் சிசிடிவி-க்களை அணைத்துவிட்டு கதவை உட்புறமாக தாழிட்டு அந்த செவிலியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் அந்த மருத்துவரின் அறையில் இருந்து மது பாட்டிலை கண்டெடுத்த போலீசார் அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மூவர் மீதும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு மற்றும் மதுவிலக்கு வழக்கு ஆகியவற்றை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.