கராச்சி: தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சினை, பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும்தானே ஒழிய, காஷ்மீர் அல்ல என்று அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானுக்கான பெரிய சவால் பொருளாதாரம்தான் என்று கடந்த மாதம் ஐஎம்எஃப் அமைப்பு அறிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

கேலப் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் பாகிஸ்தான் முழுவதும் ஆய்வு நடத்தி இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளது.

ஆய்வில் பங்க‍ேற்று கருத்து தெரிவித்த மக்களில், 53% பேர் பணவீக்கத்தையும், 23% பேர் வேலையின்மையையும், 4% பேர் ஊழலையும், 4% பேர் தண்ணீர் பிரச்சினையையும் கூறியுள்ளனர். தங்களுக்கானப் பிரச்சினை காஷ்மீர்தான் என்று கூறியவர்கள் 8% பேர் மட்டுமே.

இதுதவிர, டெங்கு, மின் தட்டுப்பாடு மற்றும் அரசியல் நிலையற்றத் தன்மை போன்றவற்றையும் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். பாகிஸ்தான் தற்போதைய நிலையில், காசுக்காக கண்ட இடங்களிலும் கையை நீட்டிவரும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.