அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்தவரான கேத்தன்ஜி பிரௌன் ஜாக்சன் என்பவரை அதிபர் பைடன் நேற்று தேர்வு செய்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் கேத்தன்ஜி பிரௌன் ஜாக்சன் முதல் கருப்பின பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, 115 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றி உள்ள நிலையில் அவர்களில் இருவர் மட்டுமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் அதிலும் ஆண் நீதிபதிகள்.

2020 ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது கருப்பின பெண் ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்த பைடன் தற்போது அதை நிறைவேற்றியதுடன் அமெரிக்க உச்சநீதிமன்ற வரலாற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஹார்வார்ட் சட்டக் கல்லூரியில் பயின்ற 51 வயதாகும் கேத்தன்ஜி பிரௌன் ஜாக்சன் தற்போது அமெரிக்க ஒன்றிய மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக இருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் இவர் 6வது பெண் நீதிபதி என்பதும் தற்போது இந்த குழுவில் இவருடன் சேர்த்து மேலும் 3 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கேத்தன்ஜி பிரௌன் ஜாக்சன் அமெரிக்க செனட் சபை அங்கீகாரத்திற்குப் பின் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது. நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் இவர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது ராஜினாமா செய்யும் வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.