ஐதராபாத்: பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக கோவாக்சின் தடுப்பு மருந்து வரும் 15ம் தேதி பயன்பாட்டுக்கு வராது என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு கோவாச்கின் என்ற பெயரிலான தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில், பாதுகாப்பு முறைகளை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதில் அவசரம் காட்டவில்லை என்று பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.

இது குறித்து அதன் இயக்குநரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ண எல்லா கூறி இருப்பதாவது: ஆனால் எங்களைப் பொறுத்தவரை, பாதுகாப்பும் தரமும் மிக முக்கியமானது. தவறான தடுப்பூசி மூலம் அதிகமானவர்களைக் கொல்ல நாங்கள் விரும்பவில்லை.

நாங்கள் சர்வதேச சமூகங்களால் கண்காணிக்கப்பட்டுள்ளோம். இது நாட்டிற்கும் எங்களுக்கும் மதிப்பளிக்கும் விஷயம். நாங்கள் ஆராய்ச்சியில் குறுகிய பார்வை பெற மாட்டோம். மேலும் சிறந்த தரமான தடுப்பூசியை உருவாக்குவோம்.

இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தரமான மற்றும் மலிவு விலையுள்ள தடுப்பூசிகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் நிறுவனம் ஒரு ரோட்டா வைரஸ் தடுப்பூசியை ஒரு டாலருக்கு அறிமுகப்படுத்தியது.

ஆகையால் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி அனைவருக்கும் மிகவும் மலிவு மற்றும் அணுகக்கூடியதாக இருக்கும். கோவிட் 19 காரணமாக மக்கள் பீதி அடையக்கூடாது. இது மற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கொரோனாவை விட அதிகமான மக்கள் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் என்று கூறினார்.