சென்னை: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி தினகரன், துரோகம் தலைவிரித்து ஆடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் , எடப்பாடியை கடுமையாக சாடியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் கடந்த முறை இருந்த ஓபிஎஸ் அணி, அமுமக கட்சி உள்பட சில கட்சிகள் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி போன்றோர்களை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவருவதாக கூறப்படுகிறது. இதனால், மத்திய பாஜக அரசும் அவர்களை கண்டுகொள்ளாமல் உள்ளது.

கடந்த மாதம் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ், டிடிவி தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படவில்லை. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. இதனால் விரக்தி அடைந்த ஓபிஎஸ் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். னக்கு சுயமரியாதை முக்கியம் என்று கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் தற்போது அவர் திமுகவுடன் நெருங்கி வருகிறார்.
இநத் நிலையில், டிடிவி தினகரனும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என நம்பினோம். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை.துரோகம் தலைவிரித்து ஆடுகிறது. தான் துரோகம் செய்தது சரி என்பது போல ஊர் முழுக்கச் சென்று ஆணவத்துடன் பேசி வருகிறார்.அம்மாவின் தொண்டர்கள் இணைந்து ‘சரியான முதலமைச்சர் வேட்பாளரை’ தருவார்கள் என இத்தனை காலம் பொறுமையாக இருந்தோம். அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்துவிட்டது. அதனால்தான் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். அமமுக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என கூறினார்.
முன்னதாக காட்டுமன்னார் கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 2026ல் நடைபெற உள்ள தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தலில், சரியான முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்று காத்திருந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் இருப்பதாகவே கருதினேன். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை, துரோகம் தலைவிரித்தாடுகிறது. ஜெயலலிதா தொண்டர்கள்இனியும் இணைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துகொண்டு நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். எந்தக் கூட்டணியில் இடம்பெறுவோம் என்பது குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.
கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், அமமுகவும் விலகியுள்ளது பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால் டிடிவி தினகரன் 2017ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். அதே ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதற்கு பின்னணியில் பாஜக இருந்ததாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது.பின்னர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்ற டிடிவி தினகரன், 2018ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அதிமுகவை மீட்பதே இலக்கு என்று களமிறங்கிய டிடிவி தினகரன், பாஜகவை சரமாரியாக விமர்சனங்கள் செய்து வந்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். 2021 சட்டமன்றத் தேர்தலை தேமுதிகவுடன் இணைந்து சந்தித்தார். எனினும், தோல்வியைத் தழுவினார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.