பெங்களூர்:
பெங்களூரில் நேற்று 20- 29 வயது மதிக்கத்தக்கவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 570 இடங்கள் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், புதிதாக 570 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து தற்போது பெங்களூரில் மொத்தமாக 13, 238 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து பெங்களூரில் இதுவரை 20, 639 கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் பதிவாகியுள்ளன.

பெங்களூரில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,220 ஆக உள்ளது. கடந்த வாரம் அதிகபட்சமாக பெங்களூரு மேற்கு மண்டலத்தில் 25% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து தெற்கு மண்டலத்தில் 22%, கிழக்கு மண்டலத்தில் 21% பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.ஆனால் கடந்த 10 நாட்களில் மட்டும் தெற்கில் 23%, கிழக்கில் 23% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது, இந்த இரண்டு மண்டலங்களிலும் தற்போது மேற்கு மண்டலத்தை விட கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

பெங்களூரு தெற்கில் அதிக எண்ணிக்கையிலானவர்கள், பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும் 4, 500 ஆக அதிகரித்துள்ளது, இதனைத் தொடர்ந்து கிழக்கு மண்டலம், அடுத்ததாக மேற்கு மண்டலம் இதைத்தொடர்ந்து பொம்மனஹள்ளி, ஆர் ஆர் நகர், மகாதேவபுறா, ஏலஹங்கா, தசரஹல்லி போன்ற பகுதிகள் உள்ளன.

தொடர்ந்து இரண்டாவது நாளாக பெங்களூரில் 20- 29 வயது மதிக்கத்தக்கவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்குமுன் ஜூலை 25-ஆம் தேதி இதே வயதில் உள்ளவர்கள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 30-ஆம் தேதி 30- 39 வயது உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப் பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் கர்நாடகாவில் 5,483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லியைத் தொடர்ந்து கர்நாடகா நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.