மும்பை:
2021-22 ஆம் ஆண்டுக்கான அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர் அட்டவணைகளையும் பிசிசிஐ வெளியிட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு ரஞ்சிக் கோப்பை உள்பட வயதுவாரி கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு அனைத்துத் தொடர்களுக்குமான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சீசன் செப்டம்பர் 21-ம் தேதி மகளிர் ஒருநாள் லீக்கிலிருந்து தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 27-இல் மகளிர் ஒருநாள் சேலஞ்சர் டிராபி தொடங்குகிறது.

சையது முஷ்டக் அலி டி20 தொடர் அக்டோபர் 20-இல் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 12-இல் நடைபெறுகிறது.

கடந்தாண்டு ரத்து செய்யப்பட்ட ரஞ்சி கோப்பை நிகழாண்டில் வரும் நவம்பர் 16-இல் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 19 வரை 3 மாதங்கள் நடைபெறவுள்ளன.இதன்பிறகு விஜய் ஹசாரே தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறுகிறது.இப்படியாக நிகழாண்டில் மொத்தம் 2,127 உள்நாட்டு போட்டிகள் விளையாடப்படவுள்ளன.