நியூயார்க்,

7 முஸ்லிம் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சரியான நடவடிகை அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கூறி உள்ளார்.

அமெரிக்கா புதிய அதிபரின் 7 முஸ்லிம் நாடுகளுக்க தடை அறிவிப்பு உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக 7 நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதித்து உத்தரவிட்டார்.

டிரம்ப் அறிவித்துள்ள இந்த தடையை நீக்கும்படி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் அமெரிக்காவுக்கு வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

‘7 முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்கா விசா தடை விதித்து இருப்பது தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றும் சிறந்த வழியாக கருத முடியாது. அது அந்த மக்களிடையே கோபத்தையும், கவலையையும் அதிகரிக்க செய்யும். எனவே, அதற்கான தடையை நீக்க வேண்டும். அது எனது கருத்து.

மேலும் டிரம்பின் இத்தகைய நடவடிக்கை சரியான வழியில்லை. இது விரைவில் நீக்கப்பட வேண்டும். மேற்கண்ட 7 நாடுகளை சேர்ந்த மக்கள் மற்றும் அகதிகள் நுழையாமல் தடுப்பதன் மூலம் மட்டும் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முடியாது.

ஏனெனில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த விரும்பும் தீவிரவாதிகள் பாஸ்போர்ட் மூலம் நபர்களை அனுப்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.