சென்னை: மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை  வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி தொடங்கியதும் ஆதார் முகாம்களை நடத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும்  பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டு தல்கள் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி இயக்குநர்கள் சார்ப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  “தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இடை நிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன. அவை உரிய பயனாளிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய, வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக பணத்தை அனுப்பும் முறை செயல்படுத்தப் பட்டுள்ளது.

இதனை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த மாணவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். எனவே, பள்ளிகளிலேயே வங்கிக்கணக்கு தொடங்க வயது அடிப்படையில் 2 நிலைகளில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, 5 முதல் 10 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் பெயரில் இணைக் கணக்காக தொடங்கப்படும்.

மாணவர், பெற்றோர் இணைந்து இந்த கணக்கை பராமரிக்க முடியும். ஆரம்பத் தொகை ஏதுமில்லாத கணக்காக இருக்கும். 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் நகல், மாணவரின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அவசியம்.

தலைமையாசிரியர்களை பொருத்தவரை தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்குதல், ஆதார் விவரம் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளிக்கு வங்கிப் பணியாளர்கள் வரும் போது, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வங்கிக்கணக்கு விவரங்கள் எமிஸ் தளத்தில் விடுபட்டிருந்தால் அவற்றை மாணவர்களிடம் இருந்து பெற்று பதிவு செய்ய வேண்டும்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.