சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு  ஜூலை 21ந்தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர்கள் சேர்க்கை கடந்த மாதம் 20ந்தேதி ( 20.06.2025) அன்று சென்னை இராணி மேரி கல்லூரியில் விண்ணப்ப பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. அத்துடன்  2025-26 ஆம் ஆண்டிற்கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த படிப்புகான விண்ணப்பதிவு  அவகாசம்  நேற்றுடன்  (09.07.2025) முடிவடைந்த நிலையில்,  மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பத்திற்கான கால அவகாசம்  21.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.

அரசு கல்வியியல் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி (பி.எட்.) மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

31.07.2025 அன்று மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 04.08.2025 முதல் 09.08.2025-க்குள் மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். 13.08.2025 அன்று மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்.

மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் http://www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். ஆகஸ்டு 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.

மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.