சென்னை: சிஸ்டத்தின் மீதான மோசடி செந்தில் பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம் சாடியுள்ள நிலையில், மக்களின் நலன்களை பலி கொடுக்கிறது திமுக அரசு என பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சம் செய்துள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை “நீதித்துறை அமைப்பின் மீதான முழுமையான மோசடி” முயற்சி என திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை வாழ்நாளில் முடிவடைவதை தமிழகம் விரும்பவில்லை என்றும் சாடியுள்ளது. இந்த வழக்கை வாழ்நாள் முழுக்க விசாரித்தாலும் வழக்கு முடியவே கூடாது என்ற காரணத்திற்காகவே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை 2000 பேரை குற்றச்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். இது தவிர 500 சாட்சிகள் வேறு சேர்க்கப்பட்டு உள்ளது என்று விமர்சித்ததுடன், அவர்மீதான வழக்குகளை ஒன்றோடு ஒன்று பின்னி பிணைய வைத்திருப்பது சிஸ்டத்தின் மீதான மோசடி என்றும் தமிழக அரசுக்கு எதிராக கோபத்தை பதிவு செய்துள்ளது.
“போக்குவரத்துக் கழகத்தில் அமைச்சரின் பரிந்துரையின் பேரில் வேலைக்காக பணம் பெற்ற தரகர்கள் யார்?, பணிக்கு தேர்வு செய்த அதிகாரிகள் யார்? பணி நியமனம் செய்த அதிகாரிகள் யார்?”இது போன்ற விவரங்களை கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.இன்று மீண்டும் விசாரணை தொடர்கிறது.

செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காகவே தனி கவனம் எடுத்து போராடும் திமுக அரசுக்கு, கிடைத்திருக்கும் சவுக்கடி இது என சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகிற்னர். இப்படி வழக்குகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என ஐடியா கொடுத்த வழக்கறிஞர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவாரா என்று தெரியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசி நடவடிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்து குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செந்தில்பாலாஜி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி , தம்மீது புகார் கொடுத்த அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து, புகார்களை திரும்பப் பெறச் செய்தார். இதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திமுக அரசு, செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களை மட்டும் குற்றச்சாட்டப்பட்டவர்களாக சேர்க்காமல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறது. இதைத் தான் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஒரு வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால், செந்தில்பாலாஜியின் வாழ்நாள் முடியும் வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார்.
இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமது நீதி தவறிய செயலுக்காக தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.