புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வரும் 12 ஆம் தேதி நாடெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. ஆண்டு  தோறும் தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. அதுவும் பசுமை பட்டாசுகளை மட்டும் தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது.

நேற்று தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.