மாட்ரிட்

கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் ஊரடங்கை நான்கு கட்டங்களாக தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக  உள்ளது.  இதில் ஸ்பெயின் நாட்டில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதுவரை 2.39 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு அடைந்துள்ளனர். அதில் 24,543 பேர் உயிர் இழந்துள்ளனர்.  பாதிப்பு அடைந்தோரில் 1,37,984 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   கடந்த சில நாட்களாக ஸ்பெயினில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த மார்ச் 14 முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஸ்பெயினில் ஊரடங்கு அமலில் உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 268 பேர் உயிர் இழந்துள்ளனர்.  உயிரிழப்பு நேர்ந்த போதிலும் அது படிப்படியாகக் குறைந்து வருவது ஒரு நல்ல அறிகுறி என அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதையொட்டி ஸ்பெயின் அரசு வரும் மே மாதம் 4 ஆம் தேதி முதல்  ஊரடங்கைத் தளர்த்த திட்டமிட்டுள்ளது.

நான்கு கட்டங்களாகத் தளர்த்தப்படும் இந்த ஊரடங்கு நடவடிக்கைகளில் முதல் கட்டமாகச் சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது,  ஒரு வாரம் கழித்து அதாவது மே மாதம் 11 ஆம் தேதிக்குப் பிறகு மதுபான நிறுவனங்களைத் திறக்க அரசு உத்தேசித்துள்ளது.  இவ்வாறு ஜூன் மாத இறுதிக்குள் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்பட உள்ளது.