டாக்கா

வேலை நிறுத்தம் செய்து வந்த வங்கதேச கிரிக்கெட் வீரரகளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் வேலை நிறுத்தத்தைத் திரும்ப பெற்றுள்ளனர்.


கடந்த திங்கள்கிழமை முதல் வங்கதேச டி20 அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன், டெஸ்ட் அணித்தலைவர் மஹ்முத்துல்லா, முஷ்பிகுர் ரஹீம் உள்பட 50 வீரர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர். இப்போராட்டத்தின் 11 அம்ச கோரிக்கைகளாக முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு, அதிகரிக்கப்பட்ட பயணப்படி, வங்கதேச கிரிக்கெட் லீக்கை வர்த்தக முறையில் மாற்றுதல், மத்திய ஒப்பந்த ஊதியத்தை அதிகரித்தல், டாக்கா ப்ரீமியர் லீக் போட்டியில் திறந்தவெளி சந்தையில் வீரர்களை மாற்றுதல் உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டது.

இந்த போராட்டத்தினால், வரும் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கிடையிலான டி20 தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.  நேற்று, வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.  சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், பங்கேற்பதற்குச் சற்று முன்னதாக வங்கதேச வீரர்கள் தரப்பில் புதிதாக 2 கோரிக்கைகள் சேர்க்கப்பட்டன.

வங்கதேச கிரிக்கெட் வாரிய வருவாயின் குறிப்பிட்ட சதவிகிதத்தை வீரர்களுடனும், அதே அளவிலான தொகையை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுடனும் பகிர வேண்டும் என்பன புதிய கோரிக்கைகள் ஆகும்..

பேச்சுவார்த்தையில் வங்கதேச வீரர்கள் தொடக்கத்தில் வைத்த 11 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் பாபோன்  “ஆக்கப்பூர்வமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் வீரர்கள் முன்வைத்த 11 அம்ச கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக சேர்க்கப்பட்ட 2 புதிய கோரிக்கைகள் குறித்து எங்களுக்குத் தகவல் கிடையாது” எனக் கூறினார்.

வங்கதேச அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன், “வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் பாபோன் கூறியதுபோல் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. கூடிய விரைவில் எங்களுடைய கோரிக்கைகள் கூடிய விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று அவரும், வாரியத்தின் மற்ற இயக்குநர்களும் உறுதி அளித்துள்ளனர். அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் நாங்கள் தேசிய கிரிக்கெட் லீக்கில் விளையாடவுள்ளதால். கிரிக்கெட் பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, வங்கதேச அணிகளுக்கிடையிலான டி20 தொடர் எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறும் என்பது தற்போது உறுதியாகி உள்ளது.