டில்லி
மத்திய அரசு நிதி உதவியை நிறுத்தியதால் நவீன மயமாக்குதல் மற்றும் அவசரத்தேவைகளுக்கு கூட பணம் இல்லை என ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருட நிதிநிலை அறிக்கையிலும் மத்திய அரசு ராணுவத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியைக் கொண்டு ராணுவம் தனது அனைத்து செலவுகளையும் கவனித்துக் கொள்கிறது. ராணுவம் தனது தேவைக்கான பல பொருட்களை நேரடியாக கடன் முறையில் வாங்குகிறது. அதனால் வாங்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் தொகையை உடனடியாக செலுத்துவதில்லை. மேலும் பல நவீன மயமாக்கும் திட்டங்களுக்கும் இந்த ஒதுக்கீட்டில் இருந்தே ராணுவம் செலவு செய்து வருகிறது.
இந்த வருட நிதி நிலை அறிக்கையில் ராணுவத்துக்கு ரூ. 21338 கோடி ஒதுக்கிட்டு செயப்பட்டுள்ளது. இந்த தொகை குறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கந்தூரி தலைமையிலான பாராளூமன்ற குழுவிடம் ராணுவ மூத்த அதிகாரி சரத் சந்த் ஒரு அறிக்கை அளித்துள்ளார்.
அந்த அறிக்கையில், “நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ள தொகையைக் கொண்டு ராணுவத்தின் நவீன மயமாக்கல், அவசரத் தேவைக்கான ஆயுதங்கள், பீரங்கி எதிர்ப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி வருகிறது. தற்போது ஒதுக்கிட்டு செய்யப்பட்டுள்ள ரூ.21338 கோடியில் ராணுவத்தின் அத்தியாவசியமான செலவான ரூ.29038 கோடியை சமாளிக்க முடியாது. அதனால் ராணுவத்தின் அத்தியாவசிய தேவைக்கும் நிதி பற்றாக்குறை உண்டாகும்.
தற்போது ராணுவம் எல்லையில் எதிரி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து கடும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. அதை எதிர்கொள்ள தேவையான பல பொருட்களை வாங்க நிதி இல்லாமல் போகக் கூடும். ஏற்கனவே மேக் இன் இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் பல தளவாடங்களை ராணுவம் செய்து வருகிறது. இந்த நிதி பற்றாக்குறையால் அந்த திட்டங்களை நிறுத்த நேரிடும். ராணுவம் கேட்டுக் கொண்டுள்ள நிதி ஒதுக்கீட்டை விட ரூ.17756 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பல பணிகளும் திட்டங்களும் முடங்கக் கூடும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.
ராணுவத்தின் இந்த அறிக்கைக்கு பாராளுமன்றக் குழு இதுவரை பதில் அளிக்கவில்லை.