சென்னை;குஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்ங் கடந்த 05.07.2024 அன்று,  மர்ம நபர்கள் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் வைத்து படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் அவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்து 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு என்கவுண்டர் செய்யப்பட்டார். அவர் தப்பி ஓட முயற்சி செய்த காரணத்தால் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டதாக கூறிய காவல்துறையினர்,  திருவேங்கடம் தலைமையிலான கும்பல் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.  அந்த வீடியோவில், ஆம்ஸ்ட்ராங் நிற்கும் பகுதிக்கு வரும் அந்த நபர்கள் சுத்து போட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டி சாய்க்கும் கொடுமையான காட்சிகள் காணப்பட்டது.

இந்த நிலையில், திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து, காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம், 2/33, த/பெ.கண்ணன். குன்றத்தூர், சென்னை உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி. கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14.07.2024 தேதி அதிகாலை. போலீஸ் காவலில் இருந்த எதிரி திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுரப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த எதிரி திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

உடனடியாக காவல் ஆய்வாளர் எதிரி திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக M3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.