சென்னை: “கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்தனர். மேலும் வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாட்டில் எத்தனை எம்எல்ஏக்கள்  ஏழை..? ஆட்சியாளர்கள் ஏழைகளா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியாக கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது என கூறினார்.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகளுடன் குறிப்பிட்ட பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மோசமான சாலைகளை மேம்படுத்திய பின்பு, சட்டப்படியும், உயர்நீதிமன்ற உத்தரவு படியும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்” என கூறினார்.

அதைத்தொடர்ந்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான அரசு  வழக்கறிஞர், “மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான பேருந்துக்கு 58 லட்சம் ரூபாய் செலவாகும். தற்போது கொரோனா பாதிப்பும் நிதி பிரச்சினையும் உள்ளதால், 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படும். தமிழ் நாடு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள்,  ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளார்களா..? எத்தனை எம்எல்ஏக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்..? என கேள்வி எழுப்பியதுடன்,  மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளையும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும்,  2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதிப்பதாக உத்தரவிட்ட  நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.