சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் தமிழ்நாடு அரசின் உணவு துறை ( ரேஷன்) போக்குவரத்து டெண்டரில் சந்தை மதிப்பை விட 107% அதிகமான தொகைக்கு டெண்டர் வழங்கியதன் மூலம் ரூ 992 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என திமுக அரசை அறப்போர் இயக்கம் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உணவுத் துறையில் தமிழ் நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், இது மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டணி ஊழல் எனறும் அறப்போர் இயக்க தலைவர் ஜெயராமன் குறிப்பிட்டுள்ளார்..
கடந்த 2024 ஜூன் மாதம் ரேஷன் துறையில் போக்குவரத்து டெண்டரில் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் கூட்டு சதி செய்து கிறிஸ்டி குமாரசாமி பினாமி நிறுவனங் களாக அறியப்படும் நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பை விட 107% அதிகமாக டெண்டர் வழங்கி ரூ 992 கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளது.
இந்த டெண்டர் வழங்குவதற்காக பல சட்டங்களை உடைத்தும் வளைத்தும் மத்திய மற்றும் மாநில அரசு பொது ஊழியர்கள் வேலை செய்துள்ளார்கள். முக்கியமாக பாஜக மீண்டும் 2024 இல் ஆட்சிக்கு வந்து முதல் 1 மாதத்திற்குள் நடந்த மாபெரும் ஊழல் இது.
இது குறித்த 40 பக்க புகார் மற்றும் 565 பக்க ஆதாரங்களை அறப்போர் இயக்கம் CBI, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, முதல்வர் ஸ்டாலின், மத்திய மற்றும் மாநில உணவு துறை அமைச்சர்கள், உணவுத்துறை செயலர்கள், உணவு ஆணையக இயக்குனர், மாநில நிதித்துறை செயலர் என அனைருக்கும் அனுப்பி உள்ளோம்..
நமது விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை நேரடி கொள்முதல் மையத்தில் அரசு கொள்முதல் செய்த பின்னர், அதனை சேமிப்பு மையத்திற்கு அனுப்பவும், ரயிலுக்கு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பவும், பின்பு நெல்லை அரிசியாக மாற்றி அதனை தாலுகா கொள்முதல் மையங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஜூன் 2023ல் ரேஷன் துறை போக்குவரத்து 38 மாவட்டங்களுக்கும் சேர்த்து டெண்டர் விட்டது.
இந்த டெண்டர்கள் கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லப்படும் முருகன் பெயரில் உள்ள முருகா என்டர்ப்ரைஸ்ஸ், கந்தசாமி அண்ட் கோ மற்றும் கார்த்திகேயா என்டர்ப்ரைஸ்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் சந்தை மதிப்பை விட 107% மேலான விலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி அளவில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளியில் சண்டை போட்டுக் கொள்வது போல் போட்டுகொண்டு, உள்ளே ஊழல் கூட்டு சதி செய்யும் மத்திய பாஜக அரசு மற்றும் மாநில திமுக அரசை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ஊடக நண்பர்களும் இந்த ஊழலை மக்களுக்கு கொண்டு சேர்த்து, இதனை அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க உரிய அழுத்தத்தை தர வேண்டும்.
இதுகுறித்த தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel