சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில், ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே காலி பணிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமே அரசாணை வெளியிடப்பட்டது. அப்போது, போக்குவரத்து துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் “ வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் சிறப்பு அலுவலரால் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 8 போக்குவரத்து கழகங்களில் 12,437 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் 25 சதவீதம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சிறப்பு அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.ஓட்டுநர், நடத்துனர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர் பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் 307 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர் மற்றும் 462 தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 769 காலியிடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்தில் 454, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 382, விழுப்புரம் போக்குவரத்து கழகம் 322, சேலம் போக்குவரத்து கழகம் 303, கோவை போக்குவரத்து கழகம் 388, கும்பகோணம் போக்குவரத்து கழகம் 561, மதுரை போக்குவரத்து கழகம் 223, நெல்லை போக்குவரத்து கழகம் 244 பணியிடங்கள் என மொத்தம் 2,877 பணியிடங்கள் நிரப்ப அரசு அனுமதி வழங்கியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு நாளை முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.