சென்னை:

69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ (இன்ஸ்டிடியூசன்ஸ் ஆப் எமினென்ஸ்) திட்டத்தை மத்திய அரசு 2017-ல் கொண்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும். அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற தேர்வானது. ​​ ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், தமிழகத்தில் அமலில்  உள்ள 67 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு பங்கம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிறப்பு அந்தஸ்து குறித்த  ஆராய்ந்து முடிவெடுக்க உயர்கல்வி உட்பட 5 துறை அமைச்சர்கள் மற்றும் 3 செயலர்கள் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்தது.

இதற்கிடையில், அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதலை மே 31-ம் தேதிக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு விதித்தது.

இந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து,  இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  அண்ணா பல்கலைக் கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு காலக்கெடு எதுவும் விதிக்க இயலாது. 69% இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை, இந்த அந்தஸ்தை வேறு யாருக்காவது மத்திய அரசு தந்துவிட்டாலும், அண்ணா பல்கலை.க்குதேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசே மேற்கொள்ளும் என தடாலடியாக தெரிவித்து உள்ளார்.