சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் அங்கன்வாடி மையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால், தமிழகம் முழுவதும்  செப்டம்பர் 1ந்தேதி  முதல் அங்கன்வாடி மையங்கள் திறந்து குழந்தைகளுக்கு சூடான சத்துணவு வழங்க வேண்டும் என  தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்,

 அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு காலை 11.30 முதல் 12.30-க்குள் சத்துணவு தரவேண்டும்.

காலாவதியான மற்றும் தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.

2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சூடான உணவு வழங்க வேண்டும்.

காலை 11.30 முதல் 12.30 மணி வரை அங்கன்வாடிகளிலேயே மதிய உணவை வழங்கிட வேண்டும்

அங்கன்வாடி மையத்திற்குள் பணியாளர்கள் நுழையும் போது கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

அங்கன்வாடி பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்

அங்கன்வாடி பணியாளர்கள் விரல்களில் நகப்பூச்சு பயன்படுத்தக்கூடாது

பணியாளர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாட்களுக்கு மதிய உணவு வழங்குவது கட்டாயம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.