தமிழக – கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்பதை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

புலம்பெயர்ந்த பழங்குடியின தொழிலாளர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS என்ற பெயரில் D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதில் தயாரிப்பாளர் சங்கமித்ரா, பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள் இளைஞர்களை சீரழிப்பதாக குற்றம்சாட்டி வரும் மருத்துவர் ராமதாஸ் குடும்ப வாரிசு கோலிவுட்டில் கால் பதித்திருப்பது அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே அலங்கு திரைப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.

95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.