சென்னை: ‘லெஜண்ட் செஸ்’ தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து 6வது தோல்வியை பதிவுசெய்துள்ளார்.
ஆன்லைன் முறையில் நடைபெற்றுவரும் ‘லெஜண்ட் செஸ்’ தொடரில், உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் ஆனந்த் உள்ளிட்ட மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இத்தொடரில் ஒவ்வொரு சுற்றிலும் 4 போட்டிகள் நடைபெறும். இத்தொடரில், ஆனந்த் ஏற்கனவே 5 தோல்விகளைப் பதிவு செய்திருந்தார். அதன்மூலம் கடைசி இடத்தில் இருந்தார் அவர்.
இந்நிலையில், ஆறாவது சுற்றில் ரஷ்ய நாட்டின் இயான் நெபோம்னியாட்சியை எதிர்கொண்ட ஆனந்த், அப்போட்டியிலும் 2.0-3.0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றுப்போனார். இதன்மூலம், தனது 6வது தோல்வியையும் பதிவுசெய்துள்ளார்.